தீபா, தீபக் இருவரும் 2-ம் நிலை வாரிசுகள்: ஜெயலலிதாவின் இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்க...சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட ரூ. 913 கோடி மதிப்பிலான  சொத்துக்களை நிர்வகிக்க தனி  நிர்வாகி ஒருவரை  நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்தாண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த  வழக்கில்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி  ஜெ.தீபக் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி  நீதிமன்றத்தில்  விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும் தங்களை  ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக  அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் தனியாக மனுக்களை  தாக்கல்  செய்திருந்தனர்.   இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ்  ஆகியோர்  அடங்கிய அமர்வு  இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர்  அடங்கிய அமர்வு அறிவித்த தீர்ப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா  இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதியை நினைவு  இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஜெயலலிதா சொத்துகளை  நிர்வகிக்க அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி  ஜெ.தீபக் ஆகியோரும் உரிமை உள்ளது. ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதாவின் சொத்துகளின் ஒரு பகுதிகளை கொண்டு அறக்கட்டளை அமைக்கலாம். இது தொடர்பாக 8 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைபோல, ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: