ஜூன் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் பெற மே 29 முதல் டோக்கன் விநியோகம்; அவரவர் வீடுகளிலேயே வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு...!

சென்னை: கொரோனா நோய் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, தமிழக அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது.  ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, ரூ.3,280 கோடி மதிப்பில் சிறப்பு  நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான அத்தியாவசிய  பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல, 31-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய  பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும்  வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலை கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஜூன்  மாதத்திற்கான அரிசி, சர்க்கரை உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வருகிற 29ம் தேதி வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டோக்கன்களில் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள  நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக  கடைபிடிக்க வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

Related Stories: