×

கள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது

ஆவடி: ஆவடி அடுத்த கண்ணபாளையம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (36).  டிரைவர். இவரது மனைவி திவ்யபிரியா (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திவ்யபிரியாவுக்கும் மேல்பாக்கத்தை சேர்ந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் பலமுறை திவ்யபிரியாவை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை. நேற்று மதியம் சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது, வீடு பூட்டி இருந்தது. சந்தேகத்தின்பேரில் மேல்பாக்கம் சென்று பார்த்தபோது, கள்ளக்காதலன் வீட்டு முன்பு திவ்யபிரியா பேசிகொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கையில் வைத்திருந்த பெட்ரோலை திவ்யபிரியா மீது ஊற்றி தீவைத்தார். இதனால், அவர் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகள் தீயில் எரிந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.  புகாரின் பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை நேற்று இரவு கைது செய்தனர்.

வாலிபரை தாக்கியதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் அஜீத்குமார் (25). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியிலிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க அஜீத்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அஜீத்குமாரின் மூக்கு உடைந்தது. காலிலும் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த அஜீத்குமாரின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது பொய் வழக்கு போட்டு தாக்கியதாகவும்,  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Counterfeit, wife, petrol, husband, arrested
× RELATED அரும்பாக்கம் பகுதியில் குட்கா...