ஊரடங்கை தளர்த்தினால் கொரோனாவின் 2-ம் உச்சநிலையை சந்திப்போம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால் முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளதால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையால் அனைத்து நாடுகளின் ஊரடங்கு தளர்வு முடிவில் மாற்றம் வரும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: