வாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்க அதிக நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி 136 கோடி மக்களுக்கு மொத்த உள்நாட்டு மதிப்பில் 10 சதவிகிதமான 20 லட்சம் கோடி தொகுப்பு நிவாரண திட்டத்தை அறிவித்தார். ஆனால், அனைத்து அறிவிப்புகளையும் கணக்கிட்டால், 1 லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.91 சதவீதமே தவிர 10 சதவீதம் அல்ல. இதனால் நாட்டு மக்களிடையே பெருத்த ஏமாற்றமும், எதிர்காலம் குறித்து கடும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: