சிவகாசி: சிவகாசியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘லாக்டவுன்’ செய்வதில் அதிகாரிகள் சொதப்பி வருவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. சிவகாசியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. திருத்தங்கல், சாமிநத்தம், சிவகாசியில் முண்டகநாடார் தெரு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே விகேஎன் தெரு, முஸ்லிம் ஓடை தெரு, அண்ணா காலனி 10வது தெரு பகுதிகளில் தலா ஒருவர் வீதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகள் `லாக்டவுன்’ செய்யப்பட்டு சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. `லாக்டவுன்’ பகுதிகளில் கடைகள் திறக்கவும், பொதுநிகழ்ச்சி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கல், சாமிநத்தம், முண்டகநாடார் தெரு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே விகேஎன் தெரு பகுதிகளில் 500 மீட்டர் தூரம் சுற்றளவு `லாக்டவுன்’ செய்யப்பட்டுள்ளது. இதில் முண்டகநாடார் தெரு ஒட்டிய தெற்கு ரதவீதியில் நகை கடை, ஜவுளிகடைகள் உட்பட வர்த்தக கடைகள் அதிகம் இருப்பதால் `லாக்டவுன்’ தூரம் குறைக்கப்பட்டு குறிப்பிட்ட தெரு மட்டும் முடக்கப்பட்டுள்ளது. டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே விகேஎன் தெரு பகுதிகளில் நகராட்சி அலுவலகம் மற்றும் ஏராளமாக வர்த்தக கடைகள் இருந்த போதிலும் `லாக்டவுன்’ தூரம் குறைக்கப்படவில்லை.