சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்து வழங்கி வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்களையும் அமைப்புசாராத் தொழிலாளர்களாகக் கருதி அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசின்கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் பிராந்திய ஆணையர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்தப் பரிந்துரையையும் கவனத்தில் கொண்டு பதிவு செய்து கொள்ளாத சிற்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.