சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி பக்தர்கள் கோயில்ளுக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து கோயில்களிலும் அனைத்து கால பூஜைகளும் நடந்து வருகிறது. இதனால் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முக்கிய கோயில்களின் நிகழ்வுகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல கோயில்களின் முக்கிய வருவாய் உண்டியல் மூலம் கிடைக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் வருவது தடைப்பட்டுள்ளதால் அவர்களின் வசதிக்காக இ-உண்டியல் வசதியை அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி பக்தர்கள் சிலர் அறநிலையத்துறை இணையதளம் வாயிலாக கோயில்களில் பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.