அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல்

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 மாதங்களுக்கு முன்பு வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவால் அந்நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தச் சரிவை ஈடு செய்வதற்காக புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் விற்பனை செய்து, அதனை வீடு தோறும் டெலிவரி செய்யும் திட்டத்தை மும்பையில் அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து 10 பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதைத்தொடர்ந்து ஜியோமார்ட் தொடர்பான அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஆனால் ஆன்லைனில் அத்தியாவசிப் பொருட்கள் டெலிவரி சேவை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.

மேலும் கொரோனா பொதுமுடக்கம் முடிவதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரி சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் 200 நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து இலவச டெலிவரி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோமார்ட்டின் சேவை அமலுக்கு வந்ததும் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளின் விற்பனைக்கு கடும் போட்டி இருக்கும் என தகவல் பரவுகிறது.

Related Stories: