திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோட்டில் பழைய தங்க நகைகளை விலைக்கு வாங்கும் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 19ம் தேதி மதிய நேரத்தில் கடையில் ஆண் ஊழியர் ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் பணியில் இருந்தனர். ஊழியர்களை தவிர வேறு யாரும் இல்லை. அப்போது ஹெல்மெட் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார். லுங்கி, சட்டை அணிந்திருந்த அவர் தனது கையில் அரிவாள் வைத்திருந்தார். வேகமாக உள்ளே நுழைந்த அவரை பார்த்து ஊழியர்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர், தான் வைத்திருந்த அரிவாளை காட்டி ஓங்கி வெட்டிவிடுவதாக கூறி ஊழியர்களை மிரட்டி நகை, பணத்தை எடுத்து தருமாறு கேட்டார். ஊழியர்களும் பயந்துபோய் அங்கிருந்த நகை, பணத்தை எடுத்து கொடுத்தனர்.
ரூ.20 ஆயிரம் பணம், 10 பவுன் நகைளை பறித்து தனது கால்சட்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தப்பினார். கடையை விட்டு வெளியே செல்லும்போது, கடையின் ஷட்டரையும் மூடி சென்றுவிட்டார். இதையடுத்து ஆண் ஊழியர் ெவளியே வந்து சத்தமிட்டபடி அவரை பிடிக்க ஓடினார். இதனிடையே, பெண் ஊழியர் கடை மேலாளர் தங்கராஜுக்கு செல்போனில் தகவல் ெகாடுத்தார். அவர், திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர், அடகுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை கொண்டு விசாரித்தனர். அப்போது, சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அழகுவேல் (35) என்பதும், சிறுபூலுவப்பட்டியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அழகுவேல் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் ஆவார். மேலும், தான் திருடும் நகைகளை தற்போது ெகாள்ளை நடந்த கடையில்தான் விற்று வந்துள்ளார். அவ்வாறு விற்பதற்கு வரும்போதுதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.