நாள்தோறும் 13,000 பேருக்கு பரிசோதனை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை...சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

சேலம் மாவட்டத்தில் தற்போது ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கிடையாது. சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 35 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தமிழகத்தில் 14,853 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் தூர்வாரும் பணி தொடங்குகிறது. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை என்றார். மத்திய அரசிடமிருந்து கேட்ட அளவிற்கு தமிழகத்திற்கு நிதி கிடைக்கவில்லை. நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்திற்கான ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு படிப்படியாக வழங்கி வருகிறது. மாநில வளர்ச்சிப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது. ஊரடங்கை முழுமையாக தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 15 மாநிலங்களில் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்து விடைத்தாளும் திருத்தப்பட்டு விட்டது என்றார்.

Related Stories: