ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை...!

சென்னை: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு வசதியாக அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக ஆறுகள், வாய்க்கால், வடிகால்வாய்களை தூர்வார 67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சாவூரில் 22.92 கோடியில் 165 பணிகள், திருவாரூரில் 22.56 கோடியில் 106 பணிகள் நாகையில் 16.72 கோடியில் 80 பணிகள், புதுக்கோட்டையில் 1.74 கோடியில் 9 பணிகள், திருச்சியில்1.76 கோடியில் 20 பணிகள், அரியலூரில் 16 லட்சம் செலவில் ஒரு பணிகள், கரூரில் 1.38 கோடியில் 11 பணிகள் என மொத்தம் 392 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, 38 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கவனிக்க வசதியாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உட்பட 50 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் இப்பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் திடீரென சேலம் புறப்பட்டு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வழியாக சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு சென்றார். தனது, சொந்த மாவட்டமான சேலத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும் முதல்வர் எடப்பாடி, நாளை மதியம் கார் மூலம் புறப்பட்டு சென்னை வர திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சேலம் சென்ற முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு கொரோனா தடுப்பு பணி குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: