வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான தவணை சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்த இஎம்ஐ சலுகை இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்களில், பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில், கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும்.

மே 31ம் தேதி வரை இந்த சலுகை உண்டு. கடன் தவணை செலுத்த வங்கிகள் வழங்கும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாத கடன் தவணையை செலுத்தாததால் அதனை வராக்க கடனாகவும் கருதக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

 இஎம்ஐ தவணை செலுத்துவதில் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 மாத சலுகை காலத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில், வங்கிகள் இதற்கு அனுமதி வழங்கினால்தான் இந்த சலுகை கிடைக்கும்.

இந்த சலுகை தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் சிலவற்றுக்கும் இது பொருந்தும். கடன் அசல் மற்றும் வட்டிக்கும் சேர்த்து இந்த சலுகை உண்டு. இந்நிலையில், நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில்,  வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் இந்த சலுகை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் தெரிவித் தார்.

குறுகிய கால கடன் வட்டி குறைப்பு

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.4 சதவீதம் குறைத்து 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வட்டி  0.75 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தது. பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் சரிவையே சந்திக்கும். இருப்பினும் 2வது அரையாண்டில் ஓரளவு ஏற்றம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஊரடங்கால் இந்த காலாண்டில் விவசாயம் தவிர பிற துறைகள் மந்த நிலையிலேயே காணப்படும் என தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு நடப்பு நிதியாண்டில், மே 15ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி 920 கோடி டாலர் அதிகரித்து 48,700 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இருந்தா கட்டிடுங்க...இல்லேன்னா கஷ்டமுங்க

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இஎம்ஐ சலுகையால் கடன் சுமை அதிகரிக்கும் என்பதால், பணம் இருப்பவர்கள் கட்டிவிடுவது நல்லது. கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்தவர்கள், எந்த வகையிலும் கடன் தவணை செலுத்துவதற்கு பணத்தை புரட்ட முடியாதவர்கள் வேண்டுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கடன் சுமைதான் அதிகரிக்கும் என வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக இந்த சலுகையை பயன்படுத்தினால், இந்த 3 மாத சலுகைக்கு ஈடாக 8 முதல் 10 மாதங்கள் அதிகமாக இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். அதாவது, 15 ஆண்டில் திருப்பிச்செலுத்தும் வகையில் ₹30 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியவர், ₹2.34 லட்சம் அதாவது, 8 முதல் 10 மாத இஎம்ஐ கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகையை பயன்படுத்தினால் என்னவாகும்?

எஞ்சிய தவணை    சலுகை மாதங்கள்    திருத்திய தவணை    கூடுதலாக செலுத்த வேண்டிய இஎம்ஐ

36    3    40    1

60    3    65    2

120    3    128    5

180    3    191    8

240    3    258    15

* ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தின்படி

Related Stories: