டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் எனவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியதாக முதல்கட்ட தகவல் வந்துள்ளது. விமானியின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக தரையிறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.