சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23.05.2020 தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர்களும், பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு காய் கழுவும், வாகனத்தில் சுகாதாரத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னை உட்பட்ட மாநகர எல்லையில் ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.