×

சிறப்பு அதிகாரிகள் குழுவில் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு- அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.  ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக - ஏற்கனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், “சிறப்பு அதிகாரிகளை” நியமித்திருப்பதால் மட்டுமே - கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரியவில்லை.

 இது அதிகாரிகளுக்குள்ளே அதிகாரப் போட்டி, பொறாமை ஆகியவற்றை ஏற்படுத்தவே பயன்படும்.  இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும். உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும்.  ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட “கூட்டு முயற்சி” ஒன்றே இதுபோன்ற நேரத்தில் கை கொடுக்கும்; மக்களின் உயிரைப் பாதுகாக்கும்.

“கொரானோவோடு வாழப் பழகுவோம்” என்று அரசு பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில் - தன் அமைச்சரவை சகாக்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இதுபோன்ற பேரிடர் நேரத்தில் கூட முதலமைச்சர் நிர்வாக ரீதியாக “வாழப் பழகிக் கொள்ளவில்லை” என்பது கவலையளிக்கிறது.  உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், கொரோனா கால முதலீடுகளை ஈர்க்க தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டிக்கு தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் தலைமை வகித்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட - அந்தக் குழுவில் அவர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை.

பாதிக்கப்பட்டு - நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க, நிதி நிலைமையைச் சீர்படுத்த ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலத்தின் நிதியமைச்சர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. இப்படி கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிக்கும் குழு எவற்றிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை. முதல்வர் பழனிசாமி, தனது அமைச்சர்களுக்குள்ளேயே “ஒருங்கிணைப்பு” இன்றி - “கொரோனா பற்றிய அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்” என்பது போல் செயல்படுவது - அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கப்படுவது,  ஆபத்தான போக்காகும்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும், அதிகரித்து வரும் நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும்,  எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ - அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது - ஏதோ திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக மட்டுமல்ல அ.தி.மு.க.,வில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  

தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல், ஏதோ ஒரு விசித்திரமான மனப்பான்மையின் காரணமாக ஒதுக்கிவைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், முக்கியத்துவம் தேடிக் கொள்ளவும், முதல்வர் முயற்சி செய்வது, அதுவும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் செய்வது, பேரிடர் மேலாண்மைக்கு ஆக்கபூர்வமான அடையாளம் அல்ல. எனவே ஜனநாயக ரீதியாக,  கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும்.


Tags : representatives ,party people ,Special Officers' Committee ,MK Stalin , Corona, Curfew, Special Officers Committee, All Party, MK Stalin
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்