முதல்வர் கான்வாயில் புகுந்த 2 பேர் கைது

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டார். மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது, ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள்  திடீரென முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் குறுக்கே புகுந்து மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார்,  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மின்னல் வேகத்தில் வந்த பைக்கை மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால், அவர்கள் எதிர்திசையில்  எம்ஜிஆர் சமாதி வழியாக தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டி சென்றபோது,  நேப்பியர் பாலத்தின் அருகே எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நவீன் (19) மற்றும்  சரத்குமார் (20) என்பதும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா வாங்கி அடித்துவிட்டு  போதையுடன் வீட்டிற்கு செல்ல பைக்கில் வந்ததும் தெரியவந்தது.அவர்கள் மீது போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: