ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை: பாக்கெட்டில் மட்டுமே இனி சமையல் எண்ணெய் விற்பனை

* லிட்டருக்கு 15 வரை விலை உயரும்

மதுரை: வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நல்லெண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டாகவும், சில்லறையாகவும்  விற்கப்படுகிறது. கலப்படம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், கடைகளில் சமையல் எண்ணெயை சில்லறையாக விற்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சில்லறை எண்ணெய் விற்பனையை அனுமதிக்க வியாபாரிகள் கோரினர். இதற்கென தனி குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில்  மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் தற்போதுதான் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வரும் ஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு முழு தடை விதித்திருப்பது எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.  இதுகுறித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இளைஞர்கள் பலர் செக்கு எண்ணெய் உற்பத்தியை சுயதொழிலாக செய்கின்றனர் .இவற்றை பேக்கிங் செய்து விற்பது சிரமமானது. சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது சிறு வணிகர்களை பாதிக்கும். தனியாக பேக்கிங் லைசென்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார சுமையும் ஏற்படும்.

இந்த உத்தரவுகள் பெரிய நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும்.  கொரோனா காலத்து தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில், கருவிகள் வாங்கி பேக்கிங் செய்து, இதற்கான பணிகள் மேற்கொள்வதும் சிரமத்திற்குரியது. இதனால் ஒரு லிட்டருக்கு ₹15 வரை விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, ஜூன் 1 முதல் பேக்கிங் கட்டாயம் என்ற உத்தரவை, ஓராண்டு கழித்து அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், ‘‘ எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006 முதலே தடை உள்ளது. 2011லும் கூடுதல் சட்டம் இயற்றி கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கலப்படம் தடுக்கவும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் பலளிக்கும். இதற்கென வணிகர்களுக்கு போதிய கால அவகாசமும் தரப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Related Stories: