ஜெனீவா: பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,599 ஆக உயர்ந்துள்ளது. 1,923,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 444,017 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் முதன்முதலில் ‛பன்றிக்காய்ச்சல் அல்லது ‛எச் 1 என் 1 நோய்த்தொற்று கண்டறிப்பட்டது. இதில் 18,500 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இறப்புகளை உலக சுகாதார அமைப்பு மதிப்பிடவில்லை எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது 2009ல் பரவிய பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது. கொரோனா மிகவும் மெதுவாக குறைகிறது. அதாவது, கீழே செல்வதை விட மேலே செல்வது அதிகமாகி வருகிறது. சரியான பொது சுகாதார நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே தொடர்பு நடவடிக்கைகளை அகற்ற முடியும். இதில் தொடர்பு கண்டுபிடிப்பதற்கான குறிப்பிடத்தக்க திறன் உள்ளது. பரவுதலை முழுமையாக நிறுத்த, ஒரு தடுப்பூசி அவசியம். ஆனால், அதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்று கூறினார்.