ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை : ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரூ.1,000 நிதி உதவியும் ரேஷன் பொருட்களையும் இலவசமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கவேண்டும் என உத்தரவிடக்கோரி ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்,சமூக விலகலை பின்பற்றி இதுவரை 96% மக்களுக்கு நிதியுதவி வழக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார். இதையடுத்து கொரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும் போது கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.தொடர்ந்து விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்குவது போன்ற திட்டத்தை அரசு கொண்டு வருவது அவசியம் என கருத்து தெரிவித்தனர். மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க, இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: