போலீசுக்கு பயந்து கூவத்தில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

திருவள்ளூர்: மதுகுடிக்க வந்தபோது போலீசுக்கு பயந்து கூவத்தில் குதித்த வாலிபர், தண்ணீரில் மூழ்கி பலியானார். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், கற்குழாய் தெருவில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானங்கள், நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. இதற்கான பாதுகாப்பு பணிக்கு, போலீசார் அங்கு சென்றனர்.அந்த நேரத்தில், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி, அதே பகுதியில் மணவாளநகரை சேர்ந்த சுரேஷ் (37) என்பவர் உள்பட 20க்கு மேற்பட்டோர் குடித்து கொண்டிருந்தனர். அவர்கள், போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர்.

அப்போது சுரேஷ், கூவம் ஆற்றுக்குள் இறங்கினார். ஆனால், போதையில் இருந்த அவர், ஆற்றில் இருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்து, தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்து, திருவள்ளூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய சுரேஷை சடலமாக மீட்டனர். பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: