சென்னை: தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 773 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798-ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தமிழகத்திலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
* தமிழகத்தில் 60,739 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 230 பேர் உள்ளனர்.
* இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்.
* தமிழகத்தில் 5 பேர் உடல்நலம் சரியில்லமால் உள்ளனர். 5 பேரை தவிர மற்ற அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
* தமிழகத்தில் போதுமான அளவு முகக்கவசம் இருப்பு உள்ளது.
* தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் மொத்தம் 21 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.
* வீட்டில் இருங்கள், தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.