திருப்புவனம்: கொரோனா தடையால் திருப்புவனம் வட்டாரத்தில் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் வாழை இலைகளை விற்பனை செய்ய முடியாமல் அறுவடை செய்யப்பட்ட இலைகளை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் நாட்டு வாழை, ஒட்டு வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. 10 மாதங்களில் வாழைகள் விளைச்சலுக்கு வந்து விடும். 12வது மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். வாழை விவசாயிகள் பெரும்பாலும் முகூர்த்த நாட்கள், திருவிழாக்களை கணக்கிட்டு வாழை சாகுபடி செய்வார்கள். திருப்பாச்சேத்தி, கானூர், பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி, சித்திரை திருவிழாக்களை நம்பி ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால் வாழை பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வாழை பயிரிட்ட விவசாயிகள் 10வது மாதத்தில் இருந்து வாழை இலைகளை அறுவடை செய்வார்கள். வாரத்திற்கு ஒரு முறை ஏக்கருக்கு 5 ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்யப்படும். வாரம்தோறும் அறுவடை செய்யாவிட்டால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்து மதுரை மார்கெட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.