குளச்சல்: குளச்சலில் ஊரடங்கு உத்தரவால் 10 கோடி மதிப்பில் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குளச்சலில் 300 விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் கட்டுமரங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள்வரை தங்கி மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கம். கட்டுமரங்கள் மாலை கடலுக்கு சென்று மறுநாள் காலை கரை திரும்பிவிடும். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கேரை,சுறா,கணவாய்,இறால்,புல்லன் மற்றும் செம்மீன்,நவரை போன்ற மீன்கள் கிடைக்கும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவிற்கு முன்பு வரை குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் கிடைத்து வந்தன. இந்த மீன்களை பெரும்பாலும் கேரள வியாபாரிகள் வாங்கி செல்வர். 144 தடை உத்தரவை அடுத்து கடந்த 23 ம் தேதி முதல் கேரளாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மால்கள்,மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளா மீன் வியாபாரிகள் குளச்சல் வரவில்லை.
இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 117 விசைப்படகுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளச்சல் கரை திரும்பின.இதில் கேரை மீன்கள் அதிகமாக கிடைத்தன.ஆனால் கேரள வியாபாரிகள் வராததால் கேரை மீன்கள் விற்பனை ஆகவில்லை.இதனால் கேரை மீனை சில்லறை விற்பனைக்கே மீனவர்கள் விற்பனை செய்தனர். இதையடுத்து உள்ளூர் மீன் பிரியர்கள் கேரை மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். தடை வரும் 14 ம் தேதி வரை அமலில் உள்ளதால் விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு விசைப்படகு 2 முறை மீன் பிடிக்க சென்று வந்தால் குறைந்தது ₹10 லட்சம் மதிப்பு மீன்கள் கிடைத்திருக்கும். 117 படகுகள் மீன் பிடித்து வந்தால் ₹10 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் நடந்திருக்கும். தடையால் 10 கோடிக்கு மேல் பணம் பரிமாற்றம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க தலைவர் பிரான்சிஸ் கூறியதாவது: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீன்பிடித் தொழிலுக்கும் அரசு தடை விதித்துள்ளதால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் வரை மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களாக குளச்சலில் 10 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை இழப்பு ஏற்பட்டுள்ளது. தடை காரணமாக கரை திரும்பிய விசைப்படகுகள் முழுவதையும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இடவசதியில்லை . போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும்.இந்த விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தடையால் அவர்கள் வேலையிழந்து உள்ளனர். எனவே மீன் பிடித்தொழிலாளர்களுக்கு 144 தடைக்காலத்திற்கு 25 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்றார்.