ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? :அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லி : அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.முதல்வர்கள் உடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி கருத்துகளை கேட்டறிவார்.முதல்வர்கள் உடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என பிரதமர் மோடி முடிவு செய்வார்.

இந்தியாவின் கொரோனா பரவலில் ஹாட்ஸ்பாட்டாக தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு திகழ்ந்துள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லி மதநிகழ்ச்சியில் பங்கேற்ற  பலரை மாநில அரசுகள் தேடி வருகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு இந்தியாவில் திடீரென பலமடங்கு உயர்ந்து உள்ளது.ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தப்லிகி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் நோய்தொற்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரேதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிக்க மத்தியஅரசுக்க கோரிக்கை விடுத்துள்ளன.இதனால், மத்தியஅரசு, ஊரடங்கு தளர்வு குறித்த முடிவுகள் எடுக்க  முடியாத சூழ்நிலையில் திண்டாடி வருகிறது.ஆனால், கொரோனா பரவலில் 2வது இடத்தில் இருக்கும் தமிழகம் இதுவரை அதுபோல எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊரடங்கு முடியுமுன் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். அப்போது,ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்து முதலமைச்சர்களின் ஆலோசனைகளை அவர் கேட்பார் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா விலக்குவதா என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Related Stories: