டெல்லி: உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக,வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் முடக்கப்படுவதாக கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.