கொரோனா பரிசோதனையில் தடுப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் எங்கே?: கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை 4612 பேருக்கு தான் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா நோய் இருக்கிறதா, இல்லையா என்கிற பரிசோதனை நடத்தப்படவில்லை. இதனால் அவர்கள் பீதியுடன் இருந்து வருகிறார்கள்.  

தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார். சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார்.   இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும்.

மத்திய அரசின் அனுமதியோடு பரிசோதனை கருவிகள், சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உடனடியாக பெறுவதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக மக்களை அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வருகிற கொரோனா தடுப்பு சிகிச்சையில் சில குறைபாடுகள் இருப்பதை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: