திருப்பதியில் தங்க, வைர நகைகளால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க, வைர நகைகளால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருமஞ்சனத்துடன் வசந்த உற்சவம் நிறைவுபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கடந்த 5ம் தேதி  தொடங்கி நடந்து வந்தது. இந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று  காலை 8 மணியளவில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சீதா, ராமச்சந்திரசுவாமி, லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத கிருஷ்ணர் ஆகியோர் மூலவர் சன்னதியில்  இருந்து தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க  திருமஞ்சனம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இதில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  வசந்த உற்சவத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் நடக்கும் தங்க கருட வாகன சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாபாவிநாசம் அடுத்த வனப்பகுதியில் உள்ள தும்புரு தீர்த்த முக்கோட்டிக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.

Related Stories: