சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நன்கு அறிந்த தகவலே. ஆனால் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அங்கு போதுமான அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை என்பதாலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்தார்.இந்த நிதியை 28.3.2020 அன்றே மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செயல்முறை ஆணை மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு பின்னர் 31.3.2020 அன்று மறுத்து ஆணை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டுவிட்டு பிறகு மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்த பிரச்னையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான வென்டிலேட்டர் வசதி செய்து தர உடனடியாக முதலமைச்சர் முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த நிதியிலிருந்து இதைச் செய்வது என்பது இப்போது முக்கியம் இல்லை. கரூருக்கு வென்டிலேட்டர் வசதிகள் உடனே வேண்டும் என்பதே முக்கியம். இவ்வாறு கூறியுள்ளார்.