சென்னை: தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621-லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தமிழகத்திலும் கொடிய பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யயப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது;* தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளனர். * தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 பெண் உயிரிழந்தார்.* இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்.* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.* தமிழ்நாட்டில் 34 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.* 33 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5,305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.