சேலம்: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும் மழை பெய்தது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்திய நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.