போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி அருகே, சிவன் கோயிலில் கொரோனா ஒழிப்பு பக்தி பாடல் பாடி விழிப்புணர்வில் ஈடுபட்ட பாரூர் போலீஸ் அதிகாரி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினரும் கணிசமான பங்களிப்பை அளித்து வருகின்றனர். தேவையின்றி சாலையில் சுற்றித்திரிவோரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தது, பின்னர் லத்தியை சுழற்றி விரட்டியது, தோப்புக் கரணம் போட வைப்பது, உடற்பயிற்சி செய்ய வைப்பது, கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்க வைப்பது என பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வரும் வெங்கடாசலம், நூதன வழியை கையாண்டு வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், வேலையின் போது பணிச்சுமை தெரியாமல் இருக்க, ஓய்வு இடைவேளையில் பக்தி பாடல்களை பாடுவது வழக்கம்.