நாகர்கோவில் : நாகர்கோவிலில் உணவின்றி தவிப்பவர்களுக்கு வழங்க, மாநகராட்சி சார்பில் திருமண மண்டபத்தில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஊடரங்கு உத்தரவு உள்ளதால் சாலைகளில் ஆதரவின்றி திரிபவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல்வேறு தன்னார்வலர்கள் அவர்களாகவே முன் வந்து உணவு பொட்டலங்களை ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் இவை போதுமானதாக இல்லை. நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் முக்கிய கடை வீதிகளில் ஏராளமானவர்கள் உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெளியேயும் பலர் ஆதரவின்றி தவிக்கிறார்கள். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கி வந்த அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவு கிடைக்காத நிலை உள்ளது. இது மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக வந்து தற்போது தொழில் எதுவும் இல்லாமல் உணவின்றி பலர் தவிக்கிறார்கள். வீடுகளில் வயதான நிலையில் தனித்து இருப்பவர்களும் உணவு இல்லாமல் உள்ளனர்.