சென்னை: எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 50 வென்டிலேட்டர் தேவை என்பதனை அறிந்து உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 வென்டிலேட்டர் வாங்க ரூ.60,00,000 நிதி ஒதுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 27.03.2020 அன்று கடிதம் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த முடியும் என்று நிர்வாக அனுமதி ரத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைத்து தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடியை பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்க, தடுப்பு நடவடிக்கைக்கு பணம் பயன்படுத்தப்படும்.