சென்னை: அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன், மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரவரக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மொத்தம் ரூ.1,03,71,878 (ஒரு கோடியே மூன்று லட்சத்து எழுபத்தொராயிரத்து என்னூற்று எழுபத்தெட்டு ரூபாய்) நிதி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கிடையே, கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 50 வென்டிலேட்டர் தேவை என்பதனை அறிந்து உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 வென்டிலேட்டர் வாங்க ரூ.60,00,000 நிதி ஒதுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 27.03.2020 அன்று கடிதம் வழங்கப்பட்டது. இதேபோல் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜொதிமணி அவர்களும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 வேன்டிலேட்டர் வாங்க ரூ.60,00,000 நிதி ஒதுக்க பரிந்துரை கடிதம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பின்னர் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இருந்து மின் அஞ்சல் வாயிலாக பெறப்பட்டது. அக்கடித்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை பெற்று நலமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வேண்டிலேட்டர் வாங்க பரிந்துரைக்கப்பட்ட கடிதத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி உடனடியாக வென்டிலேட்டர் கொள்முதல் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தலைமை செயலாளருக்கு எம்எல்ஏ செந்தில் பாலாஜி எழுதி கடிதம் எழுதியுள்ளார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும் என பதிவிட்டுள்ளார்.