சென்னை: கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கொரோனா பரவலை தடுக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
மத்திய மாநில அரசுகளின் வலியுறுத்தலை மக்கள் பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய 4 விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றினால் கொரோனா தொற்றின் 3-ம் நிலைக்கு செல்லாமல் தடுக்கலாம். மருத்துவ மாநிலமாக தமிழகமும், மருத்துவத் தலைநகராக சென்னையும் விளங்குகிறது. தலைசிறந்த மருத்துவம் இங்கு வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி கபசுர குடிநீரை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றும் சிலரால் அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அரசின் உத்தரவை பின்பற்றாதவர்கள் சமூக குற்றவாளிகளாக பார்க்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.