பழநி: 144 தடை உத்தரவின் காரணமாக பழநி அருகே குட்டிக்கரட்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் டீக்குடித்து உயிர்வாழும் அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில், அடர் வனப்பகுதிகளில் குகைகளில் வசித்து வந்த பளியர் இன மலைவாழ் மக்களை வனத்துறையினர் அழைத்து வந்து மலையோர கிராமங்களில் தங்க வைத்துள்ளனர். இதன்படி மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, புளியம்பட்டி, கத்தாளம்பாறை, குட்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பளியர் இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளி, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது.பழநி-கொடைக்கானல் சாலையில் கத்தாளம் பாறை, குட்டிக்கரடு ஆகிய இடங்களில் பளியர் இன மலைவாழ் மக்கள் சுமார் 70 பேர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மத்திய அரசு 21 நாட்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து பாதிப்படைந்துள்ளனர். ஆனால், தினக்கூலிக்கு மட்டுமே சென்று வெளி தொடர்பு போதிய அளவு இல்லாமல் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவிற்குக்கூட வழியில்லாமல் டீக்குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருக்கும் மண்திட்டு மற்றும் பொந்துப்புளி பகுதியில் வசித்து வரும் பளியர் இனமக்களுக்கு திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சமையல் பொருட்களை நேற்று முன்தினம் வழங்கி விட்டனர்.