புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஊசுட்டேரியும் ஒன்று. புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் நீண்டு கிடக்கும் இந்த ஏரி, மழைக்காலங்களில் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும். இங்கு பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால், இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மீன்களை பிடிக்க அனுமதியில்லை. மீன்கள் வளர்ந்து பறவைகளுக்கு இரையாகின்றன. மேலும் ஏரியையொட்டி வனப்பகுதி போல இயற்கையான சூழல் நிலவுவதால், இங்கு முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பூனை, உடும்பு, கீரிப்பிள்ளை உள்ளிட்ட உயிரினங்களும் அதிகளவில் உள்ளன. இதனிடையே ஊசுட்டேரியின் இயற்கை அழகு பார்ப்பவர்களை பரவசப்படுத்துவதால், இங்கு புதுச்சேரி அரசு சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டு படகு சவாரி இயக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வரும் பறவையினங்களை பார்த்து ரசித்துக்கொண்டே படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.