கிருஷ்ணகிரி: கால் முறிவால் அவதிப்பட்டு வரும் யானைக்கு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பகுதியில் கூட்டத்துடன் சுற்றிய 15 வயது ஆண் யானை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதிக்கு சென்றது. அங்கு கிணறு ஒன்றில் தவறி விழுந்த யானைக்கு இடதுபுற பின்னங்கால் முறிந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அந்த யானை கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துடுகனஅள்ளி அடுத்த திம்மராயனஹள்ளி கிராமத்தில் உள்ள மாரியப்பன் என்பவரது மாந்தோப்பில் நேற்று முன்தினம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அதே போல வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானையின் கால் வலியை போக்க ஊசிகளை போட்டனர். அத்துடன் பழத்தில், மருந்து வைத்து கொடுத்தனர்.