விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை டாக்டர், 2 நர்சுகள் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த 52 வயதான முதியவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பின் காரணமாக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இதனிடையே டெல்லிக்கு சென்று வந்த ஒருவர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அங்கு ஒரு டாக்டரும் 2 செவிலியரும் அவருக்கு சிகிச்சை அளித்த விவரம் சுகாதாரத்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த டாக்டர், 2 நர்சுகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.