கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 52 வயது நபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டார். மருத்துவர்கள் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு காய்ச்சல், இதய கோளாறு, தைராய்டு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு இருந்தது என மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறினார். மேலும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.