தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 3 மாத ஊதியம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64,583 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர, அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தூய்மைப் பணியைச் செய்து வருகிறார்கள். நேரடியாக உள்ளாட்சித் துறையில் பணியாற்றுகிறவர்களை தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் இந்த தொழிலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு போதுமான அளவில் முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் மூன்று மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: