நீதிமன்றப்பணி தொடங்குவது குறித்து மாவட்ட நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி ஆலோசனை

சென்னை: ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின், படிப்படியாக நீதிமன்ற பணிகளை துவங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளிடம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ம் முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும், நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தனர். இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் பட்சத்தில் நீதிமன்ற பணிகளை படிப்படியாக துவங்குவது தொடர்பாக கருத்துகளை அனுப்பி வைக்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், புதுச்சேரி முதன்மை நீதிபதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கருத்துகளை ஏப்ரல் 6ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்கும்படியும், கிருமிநாசினி உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கருத்து தெரிவிக்கும் படியும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் புதுச்சேரி முதன்மை நீதிபதியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதிக்க இருப்பதாகவும், அன்றைய தினம் 10 மணிக்கு வீடியோ கான்பரன்சிங்கில்  கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: