சென்னை: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த கொடிய கொரோனா வைரஸ் தமிழகத்திலும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
* கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு.
* இன்று பாதிக்கப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
* கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது.
* மருத்துவ உபகரணங்களை அதிகமாக வாங்கி வருகிறோம்.
* டெல்லி சென்று வந்தவர்கள் 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* கொரோனா தோற்று பாதிப்பில் இருந்து இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளனர்.
* சோதனையில் கொரோனா இல்லை என்றாலும் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம்.
* கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
* தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
* கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-ம் கட்டத்திற்குள் செல்லக்கூடாது என ஒவ்வொருத்தரும் நினைக்க வேண்டும்.
* 15 ஆயிரம் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
* தனியார் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர்.