பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கும்: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு முக்கியம்....மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மூடப்பட்டு இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.  இந்நிலையில் இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

இயக்கங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகள் முழுமையாக பொதுமக்கள் கூடுகையைத் தவிர்த்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா முழுக்க அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது; கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மூடப்பட்டு இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது.

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட வேண்டியிருந்தால் மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த அமைச்சகம் தயாராக உள்ளது. இந்த நேரத்தில் ஒரு முடிவை எடுப்பது கடினம். ஏப்ரல் 14 ஆம் தேதி நிலைமையை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், சூழ்நிலைகளைப் பொறுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இப்போது மீண்டும் திறக்க முடியுமா அல்லது அதிக நேரம் மூட வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாக, அதாவது நாட்டில் 34 கோடி மாணவர்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது.

Related Stories: