திருவொற்றியூர்: மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45), லாரி டிரைவர். இவரது மனைவி தையல்நாயகி (42). இவர்களது மகன்கள் சேதுபதி (23), தமிழ்செல்வன் (20). இவர்களில் தமிழ்செல்வன் சென்னை சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு சொத்தில் பங்கு கேட்டு தனது தாத்தாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் நாகராஜை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்தார். மேலும், மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி மனைவி தையல் நாயகியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நாகராஜ், மது அருந்த பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த மகன் தமிழ்செல்வன் நாகராஜை தட்டிக்கேட்டுள்ளார்.