சென்னை: திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு காக்களூர் எரிமேடை அருகே சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஜீப் மற்றும் 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஜீப்பில் 400 குவார்ட்டர் மற்றும் 120 பீர்பாட்டில்கள் இருந்தது. விசாரணையில், ஜீப் ஓட்டி வந்தவர் காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தும் வேப்பம்பட்டு தானு (34) என்பதும், உடன் 2 பைக்குகளில் வந்தவர்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களாக பணிபுரியும் திருவள்ளூர் செந்தில் (42), புல்லரம்பாக்கம் ராமகிருஷ்ணன் (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக் கடையை இரவு நேரத்தில் திறந்து, பார் உரிமையாளருக்கு மதுபானங்களை, கடை விற்பனையாளர்கள் விற்று வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பொற்செல்வனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடையை வந்து பார்வையிட்டதில், டாஸ்மாக் கடையை கடந்த 24ம் தேதி பூட்டி சீல் வைக்கும்போது, ₹12 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இருந்ததும், அதில் ₹6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடுபோனதும் தெரியவந்தது.