மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரை சரி செய்வீர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது என்றும், கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு கலைஞர் அரங்கத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தோம். சென்னையில் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள திமுக கட்டிடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம்.

மாஸ்க் உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களைத் திரட்டி, தேவைப்படுகிற மக்களுக்கு தருகிற மகத்தான வேலையையும் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதியினர், முன்னணியினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் ஆர்.டி-பிசிஆர் என்ற ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே நோய்க் கிருமியைச் சுமந்து பரப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறார்கள்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களை மட்டும் பரிசோதனைச் செய்தால் போதாது; வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காப்பதுதான் சரியானது. தனியார் மருத்துவமனைகளையும் தயார்படுத்த வேண்டும். செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். மருத்துவர்களுக்கான பிபிஇ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவற்றை அதிகரிக்க வேண்டும். மருத்துவப்பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் அதிகம் வாங்க வேண்டும்.

மத்திய அரசு, இவற்றை எல்லாம் போர்க்கால அடிப்படையில உற்பத்தி செய்து மாநிலங்களுக்குத் தர வேண்டும்.   இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது. இதை மக்களும் தமிழக அரசும் உணர வேண்டும். கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக உயர்ந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமி நாசினி, முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆட்சி நடத்துகிற முறையா? துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா? இந்த நோயின் தீவிரத்தைச் சொல்லி யார் முதலில் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்? தமிழக அரசு தான் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், நான் தான் முதன்முதலில் திமுக நிகழ்ச்சிகள் அத்தனையும் மார்ச் 31ம் தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்படும் என்று மார்ச் 16ம் தேதியே அறிவித்தேன். இந்த மெத்தனப்போக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரினேன்.

லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்குச் சொல்வதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. வீட்டில் உங்களை இருக்கச் சொல்வது உங்களது நன்மைக்காக, நாட்டுக்காக. நிறையப் படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள். பெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாகக் கழியுங்கள். இந்த 21 நாள் அனுபவம் நிச்சயம் உங்களுக்கு மனநிம்மதியைத் தான் தரும். மனக்கஷ்டத்தைத் தராது.

உலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதைப் பார்த்தேன். “இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை; இன்னொன்று போலியோ. அதே போல இந்த கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும்” என்று சொல்லி இருக்கிறார். அந்த தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை. தனித்திருப்போம். விழித்திருப்போம். கொரோனாவை வெல்வோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 சோனியா தொலைபேசியில் பேச்சு: கொரோனா நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் “கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். திமுக தொண்டர்களும், தமிழக மக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி கேட்டறிந்தார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியின் உடல்நலத்தையும் குடும்பத்தினரின் நலத்தையும் கேட்டறிந்தார். மேலும் இந்த சூழ்நிலையில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

Related Stories: