×

பம்பு செட், உதிரி பாகங்கள் உற்பத்தி பாதிப்பால் 400 கோடி ரூபாய் இழப்பு: ‘மான்செஸ்டர்’ நகரில் துயரம்

கோவை: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு,குறு தொழில்நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக கோவை உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பொருளாதாரம் பாதிக்கும் என்ற போதிலும் உயிர் வாழ்வது முக்கியம் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை கோவையில் உள்ள தொழில்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அனைத்து தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கும் பல கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கோவையில் தயாரிக்கும் பம்புச்செட் மற்றும் உதிரிபாகங்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகும். இந்த தொழிலை பொறுத்தவரையில் கோடை காலம் தான் எங்கள் நம்பிக்கை. மழை காலங்களில் பம்புசெட் ஆர்டர்கள் குறைவாகத்தான் இருக்கும்.  தற்போது ஆர்டர்கள் வரும் நேரம் ஆனால் கொரோனாவால் உலகமே தனது பொருளாதாரத்தை இழந்து தவிக்கிறது. பம்புசெட் தொழிலில் மட்டும் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ. 40 கோடி முதல் ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்படும். அதன் அடிப்படையில் தற்போது ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  தொழிலாளர்கள் மட்டும் இல்லை இந்த தொழிலை நடத்தி கொண்டிருக்கும் சிறு முதலாளிகளும் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு வார சம்பளம் கொடுக்கும்போதுதான் அவர்களுக்கும் சம்பளம் கிடைக்கும். இந்த இழப்பு அனைவருக்கும் தான்.

Tags : city ,Manchester , Pump sets, spare parts, Manchester
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு