×

கடுமையாகிறது ஊரடங்கு உத்தரவு,..கடைகளை 1 மணிக்கே மூட வேண்டும்: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை,..தமிழக அரசு எச்சரிக்கை

* பண்டிகை காலத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக் கூடாது.
* கொரோனா தொற்று நோய்க்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்.
* தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் கலெக்டர்கள் அதை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.
* காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும்.


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி  முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் பெட்ரோல் பங்க்குகளும் மதியம் 1 மணிக்கு மூடப்படும். இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் பொருட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே, மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில், மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில் நேற்று முன்தினம் கிருத்துவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய மத தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், மனித சமுதாயமே தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக அனைத்து மத தலைவர்களும் தெரிவித்தார்கள். மேலும், அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

* நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, பொதுமக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
* கொரோனா தொற்று நோய் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்
கூடியது. இதற்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதை தவிர்த்து, அவர்களை அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டும்.
* பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரிய வருவதால், கலெக்டர்கள், அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்து பேசி அவை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* தனியார் மருத்துவமனைகள், நோய்தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும் அன்போடும் நடத்த வேண்டும்.
* கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
* தொற்று நோய் உள்ளதா என கண்டறிந்து, சோதனைக்கு பின்பு தொற்று நோய் அல்லாதவர்களை உடனுக்குடன் அவர்களது வீட்டுக்கோ அல்லது தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கோ அனுப்ப வேண்டும்.
* கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்தும்போது,
சமய தலைவர்கள் உதவியோடு அவர்களின் வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக்கொள்ள, உரிய வசதிகளை செய்து கொள்ளலாம்.
* தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க சமுதாய தலைவர்கள் முன்நின்று ஒத்துழைக்க வேண்டும். இதற்காக மாவட்டம் தோறும் மன நல மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அனைத்து மத தலைவர்களும் கோரியபடி, அவர்களின் ஆளுகையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கட்டிடங்களை தனிமை படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவ வேண்டும்.
* வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் வழங்க வேண்டும்.
* மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை இன்று (ஞாயிறு) முதல் குறைத்து, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும். இதேபோல், பெட்ரோல் பங்க்குகளும் 1 மணிக்கு மூடப்படும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூட்டத்தை தவிர்க்கவும், சமூக விலகலை உறுதி செய்யவும், தன் ஆர்வலர்களுக்கு அடையாள  அட்டைகள் வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : shops ,Katumaiyakiratu ,Government , Curfew, Government of Tamil Nadu, Corona
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி